Monday, December 20, 2010

மக்கள் வாழ்வாதாரத்தின் மீது மீண்டும் ஒரு கொடூரத் தாக்குதல்

வீணாகிப்போன நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட உடனேயே, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2.95 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பெட் ரோலியப் பொருட்களின் மீதான விலைகள் மீதிருந்த கட்டுப்பாட்டை ஜூன் 26 அன்று அகற்றிய பின்பு, பெட்ரோலின் விலை ஐந்தாவது தடவையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

பெட்ரோலின் விலை கடந்த ஐந்து மாதங் களுக்குள் லிட்டருக்கு எட்டு ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. டீசலின் விலையும் விரை வில் உயர்த்தப்படும் என்று தெரிய வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு கள் அகற்றப்பட்ட நிலையிலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் விலைகள் உயர்த்தப்படுவதைத் தவிர்த்து, கூட்டத்தொடர் முடிந்தபின் இவ்வாறு விலையை உயர்த்தியிருக்கிறது. 

இதன் மூலம் நாட்டு மக்களின் பெரும் பான்மையோரின் வாழ்வாதாரத்தில் கொடூரமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் சமயத்தில், பெட்ரோலியப் பொருட்களின் இப்போதைய விலை உயர்வு பணவீக் கத்தை மேலும் அதிகப்படுத்தி, மக்களின் உண்மை ஊதியத்தை விழுங்கிவிடும். இந்த நிலையில், நிதி அமைச்சர் அவர்கள் கடந்த பதினோரு மாதங்களில் - அதாவது நவம்பர் மாதத்தில் - பணவீக்கத்தின் அளவு 7.48 விழுக்காடு என்று குறைவாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இவ்வாறெல் லாம் உண்மை நிலைமையை மறைத்துவிட முடியாது. பொது பணவீக்க விகிதம் 10 விழுக் காட்டிற்கும் மேல் விண்ணை எட்டியிருக்கிறது என்பதும், உணவுப் பணவீக்கம் கடந்த ஓராண்டில் 20 விழுக்காட்டினை நெருங்கி இருக்கிறது என்பதும் யதார்த்த நிலைமைகளாகும்.

பெட்ரோலியத் துறையில் வரி விதிக்கும் முறையை மாற்றி அமைத்து, மக்களுக்கு சிறி தாவது நிவாரணம் அளித்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக் கிறோம். 

அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கிய சம யத்தில், வரிவிதிப்பு முறையை மாற்றி அமைத்திட எதுவும் செய்திடவில்லை. அதன் விளைவு, வரியின் சுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாகி இருக்கும் அதே சமயத்தில், அரசாங்கம் வருவாயை வாரிக் கொட்டிக்கொள்கிறது. 

இந்த வருவாய் அனைத்தும் சமூகத்துறைக்குப் பயன்படுத் தத்தான் என்று அரசாங்கம் சமாதானம் கூறு வதை முற்றிலுமாகவே ஏற்பதற்கில்லை. சமூகநலத் துறைகளில் அரசு செலவழிப்பதாகக் கூறப்படும் தொகைகள் பல்வேறு ஊழல்கள் மூலம் கொள்ளையடிக்கப்படு வதை அறிவோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழலில் மட்டும் ஓராண்டின் பட்ஜெட் செலவினத்தில் 20 விழுக்காட்டை விழுங்கியிருக்கிறார்கள்.

சாமானியர்களுக்குச் சேவை செய்யவே ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்று கூறும் அரசாங்கம், அவர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. 

பொது விநியோக முறை மூலமாக விநியோகிப்பதற் காக, கிடங்குகளில் உபரியாக இருக்கக் கூடிய உணவு தானியங்களை, வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு அளிக் கப்படும் விலைகளில் அரசு உடனடியாக விடுவித்தாலே, மக்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும். அரசு 200 லட்சம் டன்கள் அரிசி மற்றும் கோதுமையைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசியாகக் கிடைத்த அறிக்கைகளின்படி, அது 475 லட்சம் டன்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை விலக்கிக் கொள்வதுடன் இவ்வாறு அதிகப்படியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள உணவு தானி யங்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் மக் களுக்கு ஓரளவுக்கு நிவாரணத்தை அளித் திட முடியும். 

இத்துடன், அத்தியாவசியப் பொருள்கள் மீது அனுமதிக்கப்படும் ஊக வர்த்தகத்தைத் தடை செய்வதும் அவசியமாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 1இலிருந்து நவம்பர் 30 வரையிலான தேதிகளில் 8,36,605.53 கோடி ரூபாய்க்கு ஊக வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. 

இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு 7,66,133.46 கோடியாக இது இருந்தது. இத்தகைய ஊக வர்த்தகத்தில் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததேயாகும். இவ்வாறு விலைகளை உயர்த்துவதன் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் சாமானிய மக்கள் மட்டுமே. 

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம், மக்களின் அவலங்கள் அதிகரித்து வருவது பற்றி கொஞ்சமும் கவலைப்படாது சொரணையற்று இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் துன்பதுயரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய வகையிலேயே கொள்கைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறது. 

இத்தகைய சூழ்நிலையில், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள 

துன்பதுயரங்களிலிருந்து மக்களுக்கு ஓரளவு நிவாரணத்தை ஈட்ட முடியும். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட் டத்தொடர் தொடங்குவதற்கு முன் அத்தகைய போராட்டங்களை மேலும் அழுத்தமாக முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments:

Post a Comment