Friday, February 25, 2011

IPL க்கு எதிராக BBL போராட எழுமா?




வரிபாக்கி வைத்திருப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - நிதியமைச்சர் ப.சிதம்பரம் 
இந்தியாவின் வரிபாக்கி 2 ,45,365  கோடி வசூலிக்க முடியவில்லை - நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் 
கடந்த 10  ஆண்டுகளில் ஒருலட்சத்து அறுபதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டது உண்மைதான் - மத்திய மந்திரி சரத்  பவார் 
ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் தத்தளிக்கும் மக்கள் எண்ணிக்கை நமது நாட்டில் என்பது கோடி - காங்கிரஸ் எம்.பி அர்ஜூன் சென் குப்தா 
நமது நாட்டு தொலைபேசி துறையில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி உல் நடந்துள்ளது - மத்திய தணிக்கை துறை 
எனக்கு தகவல் தெரியாது - பாரத பிரதமர் 
பிரதமர் நேரடி கட்டுபாட்டில் உள்ள மத்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு  லட்சம் கோடி ஊழல் - மத்திய தணிக்கை அதிகாரி 
இல்லை ... ஆமாம் ... விசாரிக்கப்படும் - பாரத பிரதமர்

நமது ஆட்சியாளர்களின் கருத்துக்கள்தான் மேலே உள்ளது. மக்களை பற்றி  எந்தவித கவலையும் இல்லாமல் நல்லவர்களை போலவும் நடித்துக்கொண்டே இருக்கின்றனர்.இவைகளை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அவர்களை அடக்கி ஒடுக்குவதில் மத்திய மாநில ஆட்சியாளர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்  இந்திய நாட்டில் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுகிறது ஆனால் இவைகளை தொழிலாளி வர்க்கம் எத்தனை காலம்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கும். அதனால்தான் நேற்று (23 .02 .11 ) இதுவரை டெல்லி மாநகரில் வரலாறு காணாத அளவில் தொழிலாளிகள் திரண்டு போராடி உள்ளனர்.

மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு, பாதுகாப்புப் படை ஊழியர்கள் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் பெடரேசன் ஆகியவற்றின் அறைகூவலுக்கிணங்க  தில்லியில் லட்சக் கணக்கில் தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும், வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஊழியர்களும் அணி திரண்டனர். மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, யுடியுசி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் “நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த பேரணி நடந்துக்கொண்டிருக்கும் போது நமது பாராளுமன்றத்தினுள் இந்திய நாட்டு ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாராம் எச்சூரி வாதிட்டுக்கொண்டிருந்தார்

"இந்தியாவில் இப்போது 2 வகையான மக்கள்தான் வசிக்கின்றனர். ஒரு பிரிவினர் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் அளவுக்கு ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடும் சக்தி உள்ளவர்கள்). மற்றவர்கள் பி.பி.எல். (வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கிறவர்கள்).2,25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஓராண்டில் வரிச் சலுகை அளித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கையை உடனே கைவிட்டு ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்க முற்போக்கு நடவடிக்கைகளை எடுங்கள்.

பணக்காரர்களுக்குக் கொடுக்கும் வரிச் சலுகையை ரத்து செய்து அந்தத் தொகைக்கு அனைவருக்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களைக் கிடைக்கச் செய்திருந்தால் விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய மூன்றிலும் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் தேவையும் பெருகியிருக்கும். அதனால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றிருக்கும்.
பெட்ரோல் விலை 7 முறை உயர்வு: கடந்த 8 மாதங்களில் பெட்ரோலின் விலையை 7 முறை உயர்த்தியிருக்கிறீர்கள். பெட்ரோலியத் துறை மூலம் மட்டுமே ரூ.2,22,000 கோடி திரட்டியிருக்கிறீர்கள். இதன் மூலம் பணவீக்கத்தை நீங்களே தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.
ஏழைகளுக்குக் கொடுக்கும் உணவு மானியத் தொகையையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஒப்பிட்டு இரண்டுமே பொது நலனுக்கான மானியச் செலவுதான் என்று பிரதமர் நியாயப்படுத்தியிருக்கிறார். இந்த வாதமே போலியானது.
அரிசி, கோதுமைக்கு தரும் மானியம் வளர்ச்சிக்கு எதிரானது. ஆனால் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் அளிக்கும் வரிச் சலுகைகள் வளர்ச்சிக்கு உதவுவது என்று எப்படித்தான் நாக்கூசாமல் கூறுகிறீர்கள் என்றே வியப்பாக இருக்கிறது.
2-ஜி ஊழல்: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்குப் பிறகு இந்தத் துறையில் உள்ள தொழிலதிபர்கள் மீது வரி விதிப்பதில்லை என்று முடிவெடுத்தீர்கள். ஆனால் உரிமம் பெற்ற தொழில் அதிபர்களோ ஆறு மாதங்களுக்குள் அவற்றை 6 மடங்கு (600%) லாபத்துக்கு மற்றொரு தொழில் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். இந்த இடத்தில்தான் ஊழலே நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருகிறீர்கள்?
நாடாளுமன்ற கூட்டுக்குழு: நாடாளுமன்ற கூட்டுக்குழுவே விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணம், அரசு நிர்வாக எந்திரத்தைத் தொழிலதிபர்கள் எப்படி தங்களுடைய லாப நோக்கத்துக்கு ஏற்ப வளைக்கிறார்கள், அதற்கு எந்த நடைமுறைகள் எல்லாம் பயன்படுகின்றன என்று அறிவதற்காகத்தான். அதை அப்போதே ஏற்றிருந்தால் நாடாளுமன்றத்தின் ஒரு தொடர் வீணாகியிருக்காது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியா இது? சமுதாயத்தின் அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம் என்று முழங்குகிறீர்கள், ஆனால் நடைமுறையில் ஏழை, பணக்காரர் இடைவெளி பெருகும்வகையில்தான் நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்.
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று கூறினால், அப்படியெல்லாம் இல்லை, இது வெறும் அனுமானம்தான் என்கிறீர்கள். ஏன் என்றால் சர்வதேசச் சந்தையில் இதுபோன்ற சேவைகளுக்கு அரசுகள் வசூலிக்கும் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இலவசமாகவே தொழில் அதிபர்களுக்கு வாரி வழங்குவது என்று முடிவு செய்திருந்ததால் உங்களைப் பொருத்தவரை இதில் வருவாய் இழப்பே கிடையாது.
35 கிலோ அரிசி திட்டம்: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வருவாயை இழக்காமல் அரசு பெற்றிருந்தால் குறைந்த விலைக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை என்ற பொது விநியோக திட்டத்தை நாட்டின் 80% மக்களுக்கு விரிவுபடுத்தியிருக்கலாம்; அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாகச் செலவிட்டிருக்கலாம்.

இவரது கேள்விகளுக்கு வழக்கம் போல கள்ள மவுனம் அல்லது மழுப்பல்கள் நிறைந்த பதிலை ஆட்சியாளர்கள் தரலாம். ஆனால் பி.பி.எல் ஐ எதிர்த்து ஐ.பி.எல் களத்தில் இறங்கும் பொது அவர்களை காத்திட இவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது என்பதற்கு மிகச்சமிபத்திய உதாரணம் துனிசியாவும், எகிப்தும்.

Wednesday, February 9, 2011

இஸ்ரோவில் ராக்கெட் (ஏ) ராசாக்கள்


ஒரு ஊருல ஒரு கொடுமைகார ராசா இருந்தானாம் (ஏ.ராசா இல்லிங்க) அவன் ஆட்சியில் நடந்த கொடும தாங்காம மக்கள் அவன் செத்தா தேவலாம்னு நெனச்சாங்கலாம். அப்படி இருக்கும் போது அந்த ராசா சாகும் நாள் செருங்கிச்சாம். அப்ப அந்த ராசா தன மகனை குப்பிட்டு "மவனே எனக்கு மக்கள் கிட்ட நல்ல பேர் இல்ல, அதனால நான் செத்தா எனக்கு நல்லபேர் வாங்கி தருகிற மாதிரி ஆட்சி செய்யிடா" அப்பிடின்னு சொல்லிட்டு செத்தானாம். அடுத்து ஆட்சிக்கு வந்த அவன் மகன் அவங்க அப்பனோட கொடுமையா ஆட்சி நடத்த துவங்கினான். அப்ப மக்கள் இவங்க அப்பன் இவனோட ரொம்ப நல்லவன் என பேச துவங்கிய கதையாக..... ஆ.ராசா கொள்ளை அநியாயம்னு பேசிய மக்களை இந்த இஸ்ரோ உழல் தொகைய கேட்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.
என்னதான் இஸ்ரோ உழல்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ம் ஆண்டு செய்துகொண்டுள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்தான் இப்போது புதிதாக ஆராயப்படும் முறைகேடு. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைவிட அதிகம். அதாவது, ரூ. 2 லட்சம் கோடி (ரூ.2,00,000,00,00,000).

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரோ தனது தொழில் பங்குதாரர் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியா பயன்பெறுவதற்கென்றே இரண்டு செயற்கைக்கோள்களை – ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ – விண்ணில் ஏவும். இதற்காக இஸ்ரோ ரூ.2,000 கோடி செலவிடும். இந்தக் கோள்களில் தேவாஸ் தனக்காக 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளும். 20 ஆண்டுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தால்  செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ரூ.174 கோடி தொகையை தேவாஸ் மல்டிமீடியா இஸ்ரோவுக்கு வழங்கும். செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அலைக்கற்றை வாடகையாக ரூ.1,150 கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும்.

2,500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன்கொண்ட இந்த செயற்கைக்கோள்களில் 70 மெகாஹெர்ட்ஸ் அளவுக்குப் பயன்படுத்தும். (ஒரு வினாடிக்கு ஒரு தகவல் அல்லது டேட்டா அனுப்புவதை ஒரு ஹெர்ட்ஸ் என்று சொன்னால், ஒரு மெகாஹெர்ட்ஸ் மூலம் ஒரு வினாடிக்கு 70 லட்சம் டேட்டாக்கள் அனுப்பும் திறன் ஆகும்). செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியவுடன் தனது தொழிலை தேவாஸ் மல்டிமீடியா தொடங்கிவிடும். இதற்காக அந்நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ளது. 

யாராடோ கம்பெனி இந்த தேவாஸ் மல்டி மீடியா
2004-ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எம்.ஜி. சந்திரசேகர், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர். இந்த நிறுவனத்தின் 17 விழுக்காடு பங்கினை, டாயிஷ் டெலிகாம் என்ற அயல்நாட்டு நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. கொலம்பியா கேபிடல், டெலிகாம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய ஜாம்பவான்கள் யார் இருக்கிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.

தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இப்போது இணையதள சேவை அளிப்பு உரிமம் மட்டுமே இருக்கிறது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு கொண்டுள்ள இந்நிறுவனம், செயற்கைக்கோள் மூலமாக புவிமிசை தனிநபர் கைப்பேசி தகவல் தொடர்புக்கு இனிமேல்தான் உரிமம் பெறவுள்ளது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வேறு எந்த செயல்பாட்டுக்கெல்லாம் தேவாஸ் மல்டிமீடியா பயன்படுத்தும் என்பது குறித்து ஒப்பந்தம் தெளிவாக இல்லை. இதே அளவு ஒதுக்கீட்டில் முன்னர் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை இந்தியா முழுவதும் சென்றடைய பயன்படுத்தியது. இந்த அலைக்கற்றையில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கான பிராட்பேண்டு சேவை அளிக்க முடியும். இதனால் எஸ்-பாண்ட் அலைக்கற்றை, 4ஜி (நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பம்) எனச் சொல்லப்படுகிறது.

அண்மையில், பாரத் சஞ்சார் நிகாம் லிட், மகாநகர் டெலிபோன் லிட் நிறுவனத்துக்கு 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அந்த அரசு நிறுவனங்கள் தலா ரூ.12,847 கோடி பணம் செலுத்தின. ஆனால் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா வெறும் ரூ.1000 கோடியில் இந்த உரிமத்தைப் பெறுகிறது என்பது அதிர்ச்சித் தகவலாகும். இந்த 4ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற உலக அளவில் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

எழுந்துவரும் கேள்விகள்
ஏலம் நடத்தாமலேயே எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதும்.  நிறுவனத்துக்குரிய (இஸ்ரோ) பாதுகாப்பு கட்டுப்பாடு முறைகள் கடைப்பிடிக்கப்படாததும்,  பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, விண்வெளி குழுமம் ஆகிய யாருக்குமே இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான விவரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படாத்ததும், குறைத்து மதிப்பீடு செய்வதால் இஸ்ரோவுக்கு ஏற்படும் செலவுகள் உள்பட எதையும் தெரிவிக்கவிக்கபடாததும்  ஏன்?
ஒப்பந்தம் செய்துகொண்டவர் நலனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மக்கள் பணம் செலவிடப்படுவதும், தேவாஸ் மல்டிமீடியாவின் நிபந்தனைகள், இதற்கு முன்னர் இஸ்ரோ செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளதும் ஏன்?

கேள்விகள் தொடர்கின்றன ஆனால் இந்த தேசத்தில் பொருப்பானவர்கலிடமிருந்து பதில்கள் மட்டும் எப்போதும் கிடைப்பதில்லை. நாட்டு முன்னேற்றத்திற்கு ராக்கெட்  விட சொன்னால் இவர்கள் மக்கள் பணத்தை புஸ்வானம் விடுவது சரியா?

Tuesday, February 8, 2011

குடிசைகள் இல்லாத சென்னையா? சென்னைக்கு வெளியே குடிசைகளா?

 சமிபத்தில் இணையதளங்களில் ஒரு குறும்படம் அதிகம்பேரால் பார்க்கப்பட்டது. அது சமூக பிரச்சனையை பேசுகின்ற படம் என்பதுதான் ஆச்சரியமான செய்தி. குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள "யாருக்காக சிங்கார சென்னை" என்கிற படம்தான் அது. இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் உள்ள கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஏரி ஆகியவைகளின் கரையில் வாழ்ந்த ஆயிரக்கனக்கான மக்களின் வாழ்க்கை  தமிழக அரசாலும், தனியார் முதலாளிகளாலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களாலும் மொத்தமாக சூரையாடப்படும் வன்மத்தை பேசுகிறது இந்தபடம். மொத்தமாய் நகரத்துக்கு வெளியே வழித்து எறியப்படும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையயின் அடுத்தப் பக்கத்தை காட்டுகிறது. புதிய இருப்பிடத்தின் வலியை சொல்கிறது.

சென்னை உள்ள கூவத்தை சீரமைக்க தமிழக அரசுடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் என்ற ராஜ் தொலைகாட்சி செய்தியுடன் குறும்படம் துவங்குகிறது. மு.க.ஸ்டாலின் நகரில் திடீரென ஒருநாள் டோக்கன் கொடுக்கப்படுகிறது. வேறு இடத்தில் உங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சொல்லுகின்றனர். முழுமையாக டோக்கன் கொடுத்து முடிக்கும் முன்பு வீடுகள் இடிக்கப்படுகின்றது. தங்கள் வீட்டில் சிக்கிய பொருட்களை எடுக்கச்செல்லும் இளைஞர்கள் காவல்துறையால் நையப்புடைக்கப்படுகின்றனர். இப்படியாக கரயோரங்களில் உள்ள பல நகர்கள் திடீரென காலிசெய்யப்படுகின்றது. பல நகர்கள் திடீரென தீப்பற்றி எரிகிறது. 2009 இல் மட்டும் 22 சேரிப்பகுதிகளில் தீப்பிடித்து 128 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதை தொடர்ந்து இந்த பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சென்னையை சுற்றி புதிதாக வருகின்ற நோக்கியா, மோட்ரோல, நிசான், ஜின்டால் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் சென்னை துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக சாலைகளும் ரயில் பாதைகளூம் போடப்படுகிறது. இதற்குதான் உழைப்பாளி மக்கள் வீடிகள் இடித்து நொறுக்கப்படுகிறது. உதாரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக 9 கிலோ மீட்டர் தூரம் துறைமுகத்திற்கு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வழியில் பல தியேட்டர்களும், ஷாப்பிங் மால்களும், தனியார் கட்டிடங்கள் இருப்பதால் திட்டம் மாற்றப்பட்டு மதுராவயல் முதல் துறைமுகம்வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டாயிரம் கோடி முதலீட்டில் சரக்கு லாரிகளும் கார்களும் மட்டும் போகும் நவீன சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் பனிரெண்டாயிரம் குடிசைகள் இடிக்கப்பட உள்ளது.

    இப்படிபட்ட இடங்களிலுருந்து விரட்டப்படும் மக்கள் எங்கே குடியேற்றப்படுகிறார்கள்? சென்னைக்கு வெளியே ஆவடி கேம்ப் பக்கம் கோரையில் அம்பத்தூர், கொரட்டூர், அயன்பாக்கம் ஆகிய ஏரிக்கரைகளிலிருந்து விரட்டப்பட்ட ஆறாயிரம் குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். வேளச்சேரிக்கு அருகில் கண்ணகிநகரில் இப்படி விரட்டப்பட்ட பதினாராயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீடும் 160 சதுர அடிக்குள் முடக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 75 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் ஒரு அடிபடை வசதிகள் இல்லாத உயர்நிலைப் பள்ளியும் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கழிப்பிடம் செல்வது அங்குள்ள பெண்களுக்கு தினமும் நரக வேதனைதான். இன்னொரு பகுதி செம்மாஞ்சேரிக்கு பக்கம் உள்ள பொட்டல்வெளி ஆறாயிரம் குடும்பங்கள் அனாதரவாக அலைந்து திரிகின்றனர். இங்கு ஒவ்வொரு வீடும் 140 சதுர அடிக்குள் முடிந்து போகிறது. இவையெல்லாம் இலவச வீடுகள் என நினைத்துவிடாதீர்கள் மாதம் 350 ரூபாய்வீதம் பதினைந்து ஆண்டுகளுக்கு கட்டவேண்டும். அதாவது இந்த ஆறாயிரம் குடியிருப்புகள் மூலம் மட்டும் நூற்றிநாற்பது கோடி அரசுக்கு வருமானம்.
    தங்கள் பிழைப்பை மாநகரத்திற்குள் வைத்துள்ள உழைப்பாளி ஊருக்கு வெளியே விரட்டப்பட்டதால் தினமும் பிழைப்புக்கு பேருந்து வசதியற்ற இடங்களிலிருந்து எப்படி வருவார்கள்? பலவகையான வாகனங்களின் துணையுடன் வந்துசெல்ல ஒருநாளைக்கு அவர்களுக்கு 30 அல்லது 40 ரூபாய் தேவைப்படும். மாநகராட்சி பள்ளிகளில் படித்த குழந்தைகள் பலகிலோமீட்டர் பயணம் செய்து படிக்க வசதி மற்றும் வழி இல்லாத காரணத்தால் இடைவிலகளை சந்திக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் சேவைசெய்ய ஆட்சியாளர்கள் துடிப்பதை இந்த ஆவண - குறும்படம் தோலுறிக்கிறது. மாநகர தெருக்களில் மக்களிடம் காட்டவேண்டிய படம் இது.
 அப்படி மக்களிடம் சென்றால் கீழ்கானும் கேள்வியை அவர்களிடம் எழுப்ப முடியும். சென்னை மாநகர மேயரும், துனை முதல்வரும் குடிசையிலா சென்னை என்ற வார்த்தைக்குள் புகுந்துக்கொண்டு எளிய மக்களின் குடிசைகளை சென்னைக்கு வெளியே தூக்கி எறிகிறார்கள்.. அப்படியானால் நீங்கள் இந்த ஆட்சியை....?
http://www.youtube.com/watch?v=Wf2gMDHu3cI&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=qbozBv2MTvQ&feature=player_embedded

Monday, February 7, 2011

தனியார் காப்பீடுகளின் நிஜமுகம் - என்.எஸ். பெருமாள்

தனியார் துறையும், பொதுத்துறையும் காப்பீட்டு நலத்திட்டங்களில் எந்த அளவுக்கு நன்மைகள் செய்கின்றன என்பது நெசவாளர் நலத்திட்டங்கள் மூலம் இப்போது வெளிச் சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

தனியார் பன்னாட்டு நிறுவனமான “ஐசிஐ சிஐ ஆரோக்கிய காப்பீடு” திட்டத்தின் கீழ் தமி ழகம் முழுவதும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் படி 2008-2009-ம் ஆண்டு வரையில் 2,89,023 நெசவாளர்கள் மத்திய, மாநில அரசுகளால் உறுப்பினர் களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெச வாளர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களி லிருந்து ஓரளவு காப்பாற்றும் திட்டமாக மத் திய, மாநில அரசுகளால் 2005-2006-ம் ஆண்டு முதல் இத்திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நெசவாளர்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகள், உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ. 781.60 பைசா செலுத்து கின்றன. இதன்படி இத்திட்டத்தில் உள்ள உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தாருக்கோ ஏற்படுகிற நோயின் தன்மைக்கேற்ப ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதுடன், ரூ. 7,500 வரை வெளி நோயாளிகளாக இருப்பவர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இத் திட்டம் கூறுகிறது. இத்திட்டத்தில் உறுப்பி னர்களாகச் சேர்ந்தவர்களுக்கு “பணமில்லா அட்டை’ என அச்சடிக்கப்பட்ட லொம்பார்டு கார்டு வழங்கப்படுகிறது.

சமீபத்திய தகவலின்படி தேசிய அளவில் 2.24 கோடி உறுப்பினர்களுக்கு லொம்பார்டு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மிகப்பெரும் தொகையை ஆண்டுதோறும் சந்தாவாகப் பெற்ற இந்நிறுவனம் திட்டத்தில் கூறியுள்ள படி மருத்துவ உதவி செய்வதில்லை!

தனியார் நிறுவனங்கள் என்றாலே முத லில் லாபம், பிறகுதான் சேவைகள் என்பது பால பாடமாக இருந்தாலும், இந்த விஷயத் தில் ஐசிஐசிஐ நிறுவனம் அப்பட்டமாக நெச வாளர்களை ஏமாற்றி வருகிறது. சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு மருந்துகளை வாங்க ரூ. 500 செல வாகிறது என்றால், அதனை லொம்பார்டு நிறு வனம் மூலமாகப் பெற மருத்துவரிடம் அதற் கென உள்ள கிளைம் படிவம் பூர்த்தி செய் யப்பட்டு, மருந்துகள் வாங்கியதற்கான ரசீ துகள் அனைத்துக்கும் மருத்துவரின் சான் றொப்பமிட்டு லொம்பார்டு நிறுவனத்தின் களப்பணியாளர்களிடம் கிளைம் படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. களப்பணியாளர் களும் ஆவணங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, அதன் பின்னரே தங்களது நிறு வனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

எல்லாம் சரியாக நடந்துவிட்ட திருப்தி யில் உதவித்தொகை கிடைக்கும் என நெசவுத் தொழிலாளி காத்திருந்தால் “படிவம் பெற்றுக்கொள்ளவில்லை’’ என்று கணினி மூலம் தட்டச்சு செய்த கடிதம் கூறுகிறது.

பயனாளிகள் அளிக்கக்கூடிய கிளைம் படிவங்கள் சரியாக இருக்கிறது என்பதால் தான் களப்பணியாளர்கள் லொம்பார்டு நிறுவ னத்துக்கு அனுப்புகின்றனர். ஆனால், லொம் பார்டு காப்பீட்டு நிறுவனம் பொய்களைச் சொல்லி மருத்துவ உதவிகளை நிராகரிக்கிறது!.

ரூ.500 பெறுவதற்கு மருத்துவரிடம் கால் கடுக்க நின்று கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்த நெசவாளி, லொம்பார்டு காப்பீட்டு நிறுவனத்தின் உதவி போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு சோர்வடைந்து போகிறான். சில கிளைம்களுக்கு அதிசய மாகப் பணம் வந்துவிடுவதும் உண்டு. சில கிளைம்களுக்குப் பயனாளிகளின் இனிஷி யல் மாற்றி எழுதுவது போன்றவற்றால் காசோ லைகள் மாற்றப்படாமல் திரும்ப அந்நிறு வனத்துக்கே அனுப்பப்பட்டு அவை மாதக் கணக்கில் திரும்புவதில்லை. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பிரிமீயத் தொகைகளை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவனம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதே காலகட்டத்தில் இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட் டுக் கழகம் நெசவாளர்களுக்காக “மகாத்மா காந்தி புங்கர் பீம யோஜனா’’ என்கிற நல வாழ்வு திட்டம் ஒன்றைத் தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகாலமாக மத்திய, மாநில அரசு களின் பங்களிப்போடு செயல்படுத்தி வரு கிறது.

இதன்படி மத்திய அரசின் பங்காக நெசவாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ. 150, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக பங்காக ரூ.100, நெசவாளர் சார்பில் மாநில அரசே கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் ரூ.80-ம் செலுத்தி வருகிறது. மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு நெசவாளர் கணக்கில் ஒருவருக்கு ரூ. 330 பெற்றுக்கொள்ளும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனது திட்டத்தில் கூறி யுள்ளபடி மிகச் சரியான முறையில் இத்திட் டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட் டத்தில் சேர்ந்த நெசவாளர்களது குடும்ப மாணவ, மாணவியருக்கு 9- முதல் 12-ம் வகுப்பு வரையில் ஒவ்வோர் கல்வியாண்டி லும் ரூ. 1,200 வழங்கப்படுகிறது. இதோடு 60 வயதுக்குள் இறக்க நேரிட்டால் ரூ. 60,000 அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் இத்திட்டத்தில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உறுப் பினர்களாகச் சேர்ந்து பயனடைந்து வரு கின்றனர்.

இத்திட்டத்தில் உதவிகள் பெற சற்று கால தாமதம் ஆகிறதே தவிர, விண்ணப்பித்த அனைவருக்கும் முறையாகப் பண உதவி வந்து சேருகிறது. லொம்பார்டு காப்பீட்டு நிறு வனம்போல விண்ணப்பங்களை நிராகரித்து ஏமாற்றுவது கிடையாது.

எல்.ஐ.சி. என்கிற இந்திய ஆயுள் காப்பீட் டுக் கழகம் மக்களின் சொத்து மட்டுமல்ல, அது இந்த தேசத்தின் சொத்து! லாப நோக்கம் கருதாமல் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தில் என்ன கூறப்பட்டிருக் கிறதோ அதை அப்படியே பின்பற்றுகிறது!

லாப நோக்கம் மட்டுமே தனியார் துறை களின் லட்சியம் என்பதால் லொம்பார்டு காப்பீட்டு நிறுவனம் தன்னுடைய பொறுப் பைத் தட்டிக் கழிக்கிறது. மத்திய அரசின் பங்களிப்பு நிதி இல்லாமல், தமிழக அரசு நடத்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் நிறுவனம் மட்டுமே லாபம் பார்க்கிற திட்டமாக மாறியிருக்கிறது. இதைத்தான் கடந்த ஆண்டு கலைஞர் காப் பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றவர் களின் எண்ணிக்கை நமக்குச் சொல்கிறது!

ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் காப் பீட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு முதலாம் ஆண்டில் ரூ. 628.20 கோடி செலுத்தி யிருக்கிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செலுத்தியிருக்கிற தொகை ரூ. 415.43 கோடிதான்! அதாவது மக்க ளின் வரிப்பணம் தமிழக அரசே முன்வந்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு ஆண்டொன் றுக்கு ரூ. 200 கோடி லாபமாக வழங்கியிருக் கிறது! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 100 கோடி செலவில் இதே தமிழக அரசு திரு வாரூரில் மருத்துவக் கல்லூரியைப் புதிய தாகத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது ஆண்டில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 750 கோடி ஒதுக்கியிருக்கிறது! கலைஞர் காப்பீட்டு அட்டை யாருக்குப் பயன்படுகிறது என்பதை தமிழக அரசு யோசிக்க வேண்டும்.

வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வண்ணமயமாக கலைஞர் காப்பீட்டு விளம் பரத்தில் திடீரென ஒருவருக்கு நெஞ்சு வலி வரும்போது,கலைஞர் காப்பீட்டு அட்டையை காட்டினாலே உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என காட்டப்படும். இது விளம்பரத்துக்கு வேண்டுமானால் சுவையாக இருக்கும்! ஆனால் நிஜத்தில் நெஞ்சு வலியுடன் செல் லும் ஒருவர் காப்பீட்டுக்கு உள்பட்ட மருத் துவமனைக்குள் நுழைந்தால் குறைந்தபட்சம் ரூ. 25,000 கட்ட வேண்டும். நோயாளிக்கு எதனால் நெஞ்சு வலி வருகிறது, என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கின்ற பரிசோதனை செய்வது எல்லாம் நோயாளி யின் பணத்தில்தான்!

பரிசோதனைக்குப்பிறகு இதய அறுவை சிகிச்சைதான் தீர்வு என மருத்துவர்கள் முடிவெடுத்தால், ரூ. 1 லட்சத்துக்குள் என்ன அறுவை சிகிச்சையோ அதை மட்டும் செய்து இரண்டொரு நாளில் நோயாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

அதற்குப் பிறகு வரும் எல்லா விளைவு களுக்கும் அந்த நோயாளியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்சிகிச்சை அவசியம் என்றால் அந்த நோயாளிதான் செலவழிக்க வேண்டும். இதுதான் உண்மை நிலை! இது எப்படி சாமானிய மக்களுக்கான உயர் சிகிச்சைத்திட்டம் என்பது தெரியவில்லை.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சுரண் டும் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர் களுக்கும் பங்கு இருப்பதால்தான் எல்லா அவலங்களும் இடம்பெறுகின்றன. சட்ட பூர்வமாக - விஞ்ஞான ரீதியாக ஊழல் நடக் கிறது.

நன்றி : தினமணி

(4.2.2011)