Wednesday, January 26, 2011

ஆனந்தமான முதல்வரும், பாவமான ஆனந்தியும்!


அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது; அழகான வீட்டிற்கு நன்றி!

ஒரு  சிறுமி, முதல்வருக்கு கடிதம் எழுதுவது போலவும், ஒரு வீட்டின் படத்தை வரைந்து அதில் நன்றி தெரிவித்து முதல்வரிடம் வழங்குவது போலவும், துணை முதல்வரை கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்து வருவது போலவும் சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் அடிக்கடியும், சினிமா தியேட்டர்களிலும் காண்பிக்கப்படுகிறது.

பின்னணி  இசையோடு, பார்ப்பவர்கள் பூரித்துப் போகும் வகையில்,  அந்த விளம்பரப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்திற்குப் பின் உள்ள விபரங்கள்,    அந்த ஆனந்திக்கு தெரியாது.

தமிழகத்தில் 2011ல் 3 லட்சம் கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாகவும், 2016க்குள் மீதமுள்ள 18 லட்சம் வீடுகள், கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கப்படும் என்றும், குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாகும் எனவும், தமிழக அரசால்  நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் பாணியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 207 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்ட அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.75,000 ஆகும். இதில் அரசால் சிமெண்ட் 50 மூட்டையும், 160 கிலோ கம்பியும் வழங்கப்படுகிறது.

பயனாளி தானே வீடு கட்டிக் கொள்ள வேண்டும். தரை மட்டம் வந்தவுடன் முதல் தவணை தொகை ரூ.9780ம், இரண்டாம் தவணையாக ரூ.16,000-ம், மூன்றாம் தவணையாக ரூ.10,000-ம் மீதி தொகை சிமெண்ட், கம்பிக்கு பிடித்தம் போக, வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் கொடுக்கப்படுகிறது. வீட்டிற்கு செங்கல் மட்டும் 9000 தேவைப்படுகிறது. ஒரு செங்கல் விலை ரூ.6 ஆக உள்ளது. 9000 செங்கல் விலை சுமார் ரூ.55 ஆயிரம். மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தில் என்ன செய்ய முடியும்? அரசுகொடுக்கும் சிமெண்ட், கம்பி போதுமானதல்ல. அரசு விலையில் சிமெண்ட் மட்டும் ரூ.10,000 கம்பி மட்டும் ரூ.10,000, கம்பி, சிமெண்ட், செங்கல் மட்டுமே ரூ.75,000 ஆகிறது. மற்ற செலவுகளில் கொத்தனார் கூலி, சித்தாள் கூலி, மணல், ஜன்னல், கதவு செலவு குறைந்தது ரூ.80,000 ஆகும். அரசு கொடுக்கும் ரூ.75 ஆயிரத்தை வைத்துக்கொண்டு எப்படி 207 சதுர அடியில் வீடு கட்டுவது மந்திரத்தில் மாங்காய் கதைதான்.

தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான பயனாளிகள் குறிப்பாக விவசாயத் தொழிலாளிகள் வீடு கட்ட முன் வரவில்லை. ரூ. ஒன்றரை லட்சம் இல்லாமல் வீடு கட்ட முடியாது. கந்து வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுவதா, கடனை கட்டுவதா என மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சம் கூரை வீட்டில் வாழ்பவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு 2016க்குள் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என அரசு விளக்கம் சொல்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 16,990 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் வேலை நடந்து வருகிறது. 2016ம் ஆண்டிற்குள் வீடு கட்ட 1,05,761 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அம்மாப்பேட்டை ஒன்றியம், நெல்லித்தோப்பு கிராமத்தில் 86 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். இவர்களில் 30 குடும்பங்கள் பாசன வாய்க்கால் ஓரமாக வாழ்கின்றனர்.  அரசு கணக்கில் இந்த வீடுகள் உள்ள இடம், ஆட்சேபணைக்குரிய வாய்க்கால் புறம்போக்கில் உள்ளது. இவர்களுக்கு குடிமனைப்பட்டா, இதுவரை வழங்கப்படவில்லை. இந்த 30 வீடுகளில் 10 வீடுகள் ஓட்டுவீடுகள்ஆகும். ஓட்டு வீடு என்றால் ஒவ்வொரு வீட்டின் மேல் உள்ள ஓடுகள் 50ல் இருந்து 100 ஓடுகளுக்கு உள்ளாக மட்டுமே இருக்கும். ஆனால் அரசு கணக்கில் இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடையாது. மீதம் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு செப்டம்பர் 21ல் குடிமனைப்பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் உழைப்பாளி மக்கள் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனுக்கொடுத்தனர். தஞ்சையில் அதே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் 40,000 மனுக்கள் அளிக்கப்பட்டது. அந்த 40,000ல் நெல்லித்தோப்பைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் குடிமனைப்பட்டா கேட்டு மனுக்கொடுத்தனர்.

இதுவரை அந்த மனுவிற்கு எந்த பதிலும் இல்லை. வட்டாட்சியரிடம் கேட்டபோது, நீங்கள் குடியிருப்பது ஆட்சேபணைக்குரிய நீர்வழிப்புறம்போக்கு. எனவே குடிமனைப்பட்டா வழங்க முடியாது என கூறினார். ஆனால் 2011 ஜனவரியில் வாய்க்கால் புறம்போக்கில் குடியிருக்கும் அதே தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 2016க்குள் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  2011 மே மாதம் தேர்தலையொட்டி இன்னும் என்னென்ன கூத்துக்களும், பாடல்களும் அரங்கேறப் போகிறதோ?

முதல்வர் சிரித்துக்கொண்டு ஆனந்தமாகத்தான் இருக்கிறார். ஆனந்திகள் தான் பாவமாக இருக்கிறார்கள்.
(தீக்கதிரில், தஞ்சை வசந்த் எழுதியதிலிருந்து…)

No comments:

Post a Comment